காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கலக்கம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி, ஏத்தக்கோவில் கிராமங்களை சார்ந்துள்ள மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள நக்கலக்கரடு, பண்ணைக்கரடு, வாசிமலை, ஒண்டிச்சாமி கரடு பகுதியில் காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் கப்பைக்கிழங்கு, நிலக்கடலை, சோளம், கம்பு பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். மலை மற்றும் கரடு பகுதியில் இருந்து இரவில் கூட்டமாக இறங்கி வரும் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இரவில் இப்பகுதி விவசாயிகள் இடைவிடாத ஓசை எழுப்பி காட்டுப் பன்றிகளை விரட்டுகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியவில்லை. வனத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. விளைந்த பயிர்கள் சேதமாவது கவலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கூறினர்.