போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை
போடி : போடி சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஆக. 21 ல் நடைபெற உள்ள நிலையில் நேற்று கோயிலில் புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான கும்பாபிஷேகம் வரும் ஆக., 21 ல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இந்து அறநிலையத்துறை, உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் மூலம் கோயில் புனரமைப்பு, புதிய சிலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஒட்டி புதிதாக உருவாக்கப்பட்ட கொடிமரம் பிரதிஷ்டை நேற்று இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் அன்னக்கொடி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் நாராயணி, நகை மதிப்பீட்டு அலுவலர் ராஜேஸ்வரன். கோயில் கணக்கர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கொடிமரம் நடும் விழாவை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவில் உபயதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.