உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் புலம்பும் அரசுத்துறை அலுவலர்கள்

வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் புலம்பும் அரசுத்துறை அலுவலர்கள்

கம்பம்: அரசு ஊழியர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்புவதால், பல நேரங்களில் பிரச்னைகள் ஏற்படுவதாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் புலம்புகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி ஜெட் வேகத்தில் உள்ளது. வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், முகநுால், இ மெயில் என பல வழிகளில் தகவல்கள் வெளியாகின்றன. அரசு துறைகளில் குறிப்பாக ஊரக வளர்ச்சி, வருவாய், நீர்வளத்துறை, கல்வித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பத்திரப் பதிவுத்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறைகளிலும், வாட்ஸ் அப்பில் உயர் அதிகாரிகள் தகவல்களை பதிவிட்டு பதிலை எதிர்நோக்குகின்றனர். அரசு ஊழியர்கள் கூறியதாவது: காலையில் அலுவலகம் வந்தவுடன் நாம் அலுவலக பணியில் மூழ்கியிருப்போம். உடனே சில தகவல்களை கேட்டு உயர் அதிகாரி வாட்ஸ் அப் தகவல் அனுப்பியிருப்பார். ஆனால் நாம் அலைபேசியை பார்த்திருக்க மாட்டோம். உணவு இடைவேளையில் அலைபேசியை பார்க்கும் போது தான் நமக்கு விசயமே தெரியவருகிறது. ஆனால் உயர் அதிகாரிகள் நம் மீது கோபம் கொள்வார்கள். தகவல் அனுப்பும் போது அலைபேசியில் கூப்பிட்டுக் கூறினால், நாம் உடனே தகவல்களை திரட்டி தந்து விடுவோம். எப்போதும் அலைபேசியை பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா. அப்படியிருந்தால் அலுவலக பணி பார்ப்பது பாதிக்கப்படாதா. எனவே இனிமேலாவது உயர் அதிகாரிகள் வாட்ஸ் அப்பில் தகவல்களை கூறுவதை காட்டிலும், வேறு முறைகளில் தகவல் கூறினால் அரசு பணி செம்மையாக நடக்கும் என்று கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ