ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய விசாரணை அதிகாரிகள்...தயக்கம்: தொழில்நுட்ப குளறுபடயால் புகார்தாரர்கள் அதிருப்தி
தேனி: புதிய குற்றவியல் திருத்த சட்டத்தில் ' ஜீரோ' எண்ணிட்டு எப்.ஐ.ஆர்., பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறைக்கு அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் புகார்தாரர்கள் அதிருப்தி அடைந்துளளனர்.குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு சேவைக்கான ஒருங்கிணைந்த இணைய முனையம் (Crime and Criminal Tracking Network & System) என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை முனையம் ஆகும். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் குற்ற வழக்குகளை முறைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் இணைய முனையம் ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை விசாரணை அதிகாரி ஒப்புதலுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதில் பதிவாகும் வழக்குகளுக்கு எப்.ஐ.ஆர்., எண் பதிவிடப்படுகிறது. இந்த எப்.ஐ.ஆர். எண்களை வைத்து ஒருங்கிணைந்த முனையம் மூலம் நீதிமன்றங்கள் விசாரணை நடத்துகிறது. ஆனால், 2024 ஜூலை 1ல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் திருத்த நடைமுறை சட்டங்களில், பாதிக்கப்பட்ட ஒருவர் எங்கிருந்தும், எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்கலாம். அதனை பதிவு செய்து சம்பவம் நடத்த இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்.ஐ.ஆர்., விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சம்பவம் நடந்த இடத்தை விட்டு மாற்று இடத்தில் இருந்து கொடுக்கப்படும் புகார்களை பெறும் போலீசார், நீதிமன்றங்களுக்கு பதில் கூற வேண்டும் என கருதி ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவிட காலம் தாழ்த்துவதாக புகார்தாரர்கள் கூறுகின்றனர். பிற மாநிலங்களில் ஜீரோ எப்.ஐ.ஆர்., ஆவணங்களை 2.0 மேம்படுத்தப்பட்ட சாப்டூவேரில் பதிவேற்றும் வசதி உள்ளது. ஆனால் தமிழகத்தில் 2.0 திறன் மேம்படுத்த வில்லை. இதனால் ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவிட புதிய டிஜிட்டல் வரிசை எண் வழங்கி தொழில்நுட்ப குளறுபடிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பாக்ஸ் ஜீரோ எப்.ஐ.ஆர்., என்றால் என்ன சிவக்குமார், பேராசிரியர், அரசு சட்டக்கல்லுாரி, தேனி: பாதிக்கப்பட்ட நபர் நாட்டின் எங்கிருந்தும் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்கும் வசதி புதிய குற்றவியல் திருத்த சட்டங்களில் உள்ளது. இதனை பதிவு செய்யும் விசாரணை அதிகாரி அந்த முதல் தகவல் அறிக்கையில் ஜீரோ எண்ணிட்டு பதிவு செய்ய வேண்டும். அதன் பின் அந்த எப்.ஐ.ஆர்., நகலை சம்பவ நடந்த இடத்தின் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர் அதனை பெற்று விசாரித்து புதிய எப்.ஐ.ஆர்., எண்ணிட்டு, நீதிமன்றங்களில் ஆவணங்களை சமர்பிக்க சி.சி.டி.என்.எஸ்., இணைய முனையத்தில் பதிவிட வேண்டும். நீதிமன்ற நடைமுறைகளில் விளக்கம் அளிப்பதில் சிரமம் சந்திக்க வேண்டியிருப்பதால் ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவிட மறுக்கின்றனர். ிந்த அதிகாரிகள் மீது, புகார்தாரர்கள் நீதிமன்றங்களில் புகார் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.