சாகச பயணம் செல்லும் ஜீப்புகள் தகவல் சேகரிக்கும் பணி துவங்கியது
மூணாறு,: தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் உத்தரவுபடி ஜீப் சபாரி எனும் சாகச பயணம் செல்லும் ஜீப்புகளின் தகவல்கள் சேகரிக்கும் பணி துவங்கியது.இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஜீப் சவாரி எனும் சாகச பயணத்திற்கு ஜூலை 5ல் கலெக்டர் விக்னேஸ்வரி தடை விதித்தார். மாவட்டத்தில் சாகச பயணம் செல்லும் ஜீப்புகள் குறித்து தகவல்களை சேகரித்து ஜூலை 10க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவிட்டார். பெரும்பாலான ஊராட்சிகளில் அறிக்கை தாக்கல் செய்யபடவில்லை.இந்நிலையில் தேவிகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீஸ், வனம், மோட்டார் வாகன துறை, ஊராட்சி செயலர் ஆகியோரின் உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது தேவிகுளம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சாகச பயணம் செல்லும் ஜீப்புகளின் தகவல்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு செயலர்களுக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி சாகச பயணம் செல்லும் ஜீப்புகள், அவற்றை செயல்படுத்துவோர், டிரைவர்கள், பயணிகள் பதிவேடு, செல்லும் இடங்கள், விபத்து பகுதிகள், புகார்கள், விபத்து ஏற்பட்டால் கடை பிடிக்க வேண்டிய முன் ஏற்பாடுகள் ஆகியவற்றை குறித்து தகவல் சேகரிக்கும் பணி துவங்கியது. அதன் அறிக்கை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.