உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆன்மிக நகரான குச்சனுாருக்கு சிறப்பு திட்டம் தேவை: ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்குமா

ஆன்மிக நகரான குச்சனுாருக்கு சிறப்பு திட்டம் தேவை: ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்குமா

தேனி மாவட்டம் குச்சனுாரில் மட்டுமே சுயம்புவாக சனீஸ்வரர் சுரபி நதிக்கரையில் எழுந்தருளியுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும், ஆண்டு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் திரளாக தரிசனம், பரிகார பூஜைகளுக்காக வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருந் திருவிழா கொண்டாடப்படும். ஆடியில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் திருவிழா விமரிசையாக நடைபெறும். மூன்றாவது சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு கழிப்பறை வசதி போதிய எண்ணிக்கையில் கிடையாது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே நகரில் வரும் வாகனங்களை பார்க்கிங் செய்ய வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட், கழிப்பறைகள், குளியலறைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும். கோயிலிற்கு செல்லும் முன் சுரபி நதியில் குளித்து விட்டு பக்தர்கள் செல்கின்றனர். அந்த இடத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித் தனியாக குளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த இடத்தில் உடை மாற்றும் அறைகள் கட்ட வேண்டும். வரும் பக்தர்கள் எந்தவித சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து செல்ல வழிகாட்டிகள் நியமிக்க வேண்டும். ஹிந்து சமய அறநிலைய துறை குச்சனுாருக்கு என சிறப்பு வளர்ச்சி திட்டம் ஒன்றை அறிவித்து செயல்படுத்த வேண்டும். அப்போது தான் குச்சனுாருக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து செல்ல முடியும் என பக்தர்கள், உள்ளூர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ