மாரத்தான் போட்டி: 5 வயது முதல் 66 வயது தன்னார்வலர்கள் பங்கேற்பு
கூடலுார், : கூடலுாரில் நடந்த மாரத்தான் போட்டியில் 5 வயது முதல் 66 வயது வரை தன்னார்வலர்கள் பொது மக்கள் பங்கேற்ற நிலையில், சிறுவர் சிறுமிகள் ஓடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.கூடலுாரில் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இணைந்து அடிப்படை சட்ட விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி நடத்தியது. இதில் 5 வயது முதல் 66 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றனர். கூடலுார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து லோயர்கேம்ப் குறுவனத்துப் பாலம் வரை சென்று திரும்பும் இப்போட்டியை நகராட்சித் தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைவர் சுரேஸ் கிருஷ்ணா, செயலாளர் லிவினோதாஸ், மகளிர் குழு மாநிலச் செயலாளர் சைமோர் நடேசன், தேனி மாவட்டச் செயலாளர் திலகர் செய்திருந்தனர். ஐந்து வயதுடைய சிறுவர் சிறுமிகளும், 66 வயதுடைய கூடலுாரைச் சேர்ந்த சிவமுருகன் என்பவரும் நிர்ணயிக்கப்பட்ட துாரத்தை ஓடி முடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.