முல்லை பெரியாறு அணை விவகாரம் லோயர்கேம்பில் முற்றுகை போராட்டம்
கூடலுார்: கேரளாவில் முல்லை பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பல இடங்களில் இதற்காக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அக்., 1 முதல் முல்லை பெரியாறு அணையை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுதவிர, 2022ல் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோசப் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அடுத்த 12 மாதங்களுக்குள் முல்லை பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என, மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.இது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, விவசாயிகள் கருதுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர், குமுளி லோயர்கேம்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன்காட்சிக் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், கவுரவத் தலைவர் சலேத்து தலைமையில் லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து, குமுளி நோக்கி முற்றுகையிட சென்றனர்.மலைப் பாதையில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கேரள அரசை கண்டித்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விஷம பிரசாரத்தை நிறுத்தணும்!
ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதையும், கேரளாவின் கோரிக்கையை ஏற்று 12 மாதங்களுக்குள் அணையை முழுமையாக ஆய்வு செய்ய இருப்பதையும் ஒருபோதும் ஏற்க முடியாது. பல்வேறு நிபுணர் குழுக்கள் பல கட்ட ஆய்வு பணியை முடித்த பின் தான், 2014ல் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்; பேபி அணையை பலப்படுத்திய பின் மீண்டும் 152 அடியாக உயர்த்தலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையில், பேபி அணையை பலப்படுத்த கேரள அரசு இதுவரை அனுமதிக்காத போது, தற்போது எப்படி முழுமையான ஆய்வை மீண்டும் நடத்த முடியும். பேபி அணையை உடனடியாக பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அணை குறித்து கேரளாவில் விஷம பிரசாரங்கள் செய்வதை நிறுத்த வேண்டும் என, அவர் கூறினார்.