ஊராட்சி பணியாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பெடுத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுருளி, பொருளாளர் பன்னீர்செல்வம், மக்கள் நலப்பணியாளர் சங்க நிர்வாகி சுதர்சனம்,முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5ஆயிரம், பணிக்கொடை ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் துாய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மாவட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் உட்பட ஊராட்சி பணியாளர்கள் பலர் தற்செயல் விடுப்பு எடுத்திருந்தனர். இதனால் சில ஊராட்சிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டது.