பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்களில் குவிந்த பயணிகள்
தேனி : பள்ளி காலாண்டு, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை முடிந்து பணிபுரியும் ஊர்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தவர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் குழந்தைகள், முதியவர்களை அழைத்து வந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சிலர் பஸ்சில் இடம் பிடிப்பதற்காக ரோடுகளில் ஆங்காங்கே நின்றனர். போடி, தேனி ரயில்வே ஸ்டேஷன்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மாலை மதுரை சென்ற பயணிகள் ரயிலில் வழக்கத்தை விட அதிகளவில் பயணித்தனர்.