வேலை வாங்கி தருவதாக ரூ.13.8 லட்சம் மோசடி
தேனி:மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, 13.8 லட்சம் ரூபாய் பெற்று போலி பணி ஆணை வழங்கிய ஒப்பந்ததாரர் மற்றும் அவரது நண்பர் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிந்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் அருண்யா, 35. இவரும் மதுரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தப்பணி செய்யும் கம்பம் சசிக்குமாரும் நண்பர்கள். இவர்கள் இணைந்து, ஆனந்தபிரபுவிடம் தேசியநெடுஞ்சாலைத் துறை மதுரை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறினர்.இதை நம்பிய ஆனந்தபிரபு, அருண்யாவின் வங்கிக்கணக்கிலும், சசிக்குமாரிடமும், 13 லட்சத்து 8,550 ரூபாய் தந்தார். பணத்தை பெற்ற சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பணி ஆணை என்ற ஒன்றை ஆனந்தபிரபுவிடம் வழங்கினர். அது போலியானது என தெரிந்தது. இதுகுறித்து ஆனந்தபிரபு, தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., யாழிசைசெல்வன் ஆகியோர் அருண்யா, ஒப்பந்ததாரர் சசிக்குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.