ரூ.90 லட்சம் மோசடி பா.ஜ., பிரமுகர் கைது
கடலுார்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம், புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 36. இவரது நண்பர் விருத்தாசலத்தை சேர்ந்தவர் டாக்டர் ராஜ்குமார். இவர், பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர். இந்நிலையில், பெரியவடவாடியில் பெட்ரோல் பங்க் துவங்குவதாக கூறி, 2023ம் ஆண்டு, பாஸ்கரிடம் 14 லட்சம் ரூபாயை ராஜ்குமார் கடனாக பெற்றுள்ளார். பின்னர், தொழில் வளர்ச்சிக்கு என்று கூறி, 30 லட்சம் ரூபாய் பெற்றார்.விருத்தாசலத்தில், 6.5 சென்ட் இடத்தை வாங்குவதற்கு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வியிடம், 52 லட்சம் ரூபாய் விலை பேசி, முன்பணமாக, 2 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் ஏற்படுத்தியதாகவும், அந்த இடத்தை வாங்கிக் கொள்ளுமாறும் பாஸ்கரிடம், ராஜ்குமார் கூறினார்.நம்பி, பல தவணைகளாக ராஜ்குமார், அவரது மனைவி விஜயாவதி ஆகியோரிடம், 42 லட்சம் ரூபாயை பாஸ்கர் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்கரின் தந்தையிடமும் 4.75 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.தம்பதி இருவரும் மோசடி செய்ததையடுத்து, பணத்தை திருப்பிக் கேட்டதற்கு ராஜ்குமார், அவரது மனைவி விஜயாவதி, தாய் சுலோக்சனா ஆகியோர், பாஸ்கருக்கு மிரட்டல் விடுத்தனர். புகாரின்படி, கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். விஜயாவதி, சுலோக்சனாவை தேடி வருகின்றனர்.