உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிலத்தை தானமாக பெற்று பெற்றோரை பராமரிக்காத மகன்கள் பத்திரப்பதிவை ரத்து செய்ய ஆர்.டி.ஓ., உத்தரவு

நிலத்தை தானமாக பெற்று பெற்றோரை பராமரிக்காத மகன்கள் பத்திரப்பதிவை ரத்து செய்ய ஆர்.டி.ஓ., உத்தரவு

உத்தமபாளையம்,:பெற்றோரிடம் ரூ. 4.80 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக பெற்று அவர்களை பராமரிக்காத மகன்களிடம் இருந்து சொத்துக்களை திரும்ப பெறுவதற்காக பத்திரப்பதிவை ரத்து செய்ய உத்தமபாளையம் ஆர். டி.ஓ. செய்யது முகமது உத்தரவிட்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி நந்தவனத் தெருவில் வசித்தவர் கலைமணி. இவரது மனைவி லோக மணி. இவர்களுக்கு அருள், பிரபு,பெருமாள் , ரமேஷ், சுரேஷ், பவனீஸ்வரன் என 6 மகன்கள் உள்ளனர். இவர்களில் பிரபு, சுரேஷ் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஓடைப்பட்டியில் வசித்து வரும் அருள், ரமேஷ், பவனீஸ்வரன் ஆகியோர் பெற்றோரிடம் இருந்த 12 ஏக்கர் நிலத்தை 2020ல் தானமாக பெற்றனர். இங்கு ஒரு ஏக்கர் ரூ.40 லட்சம் மதிப்பிலானது. ரூ.4.80 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக பெற்ற போது பெற்றோர் மற்றும் மற்றொரு தம்பியான பெருமாள் ஆகியோரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அதன்படி செயல்படவில்லை. இதனால் பெற்றோர் அன்றாட செலவுகளுக்கு சிரமப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலைமணி, மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் பெற்றோரை பராமரிக்காத மகன்களுக்கு தானமாக கொடுத்த சொத்தை திரும்ப பெறும் சட்டத்தின் படி அதனை பெற்றுத் தரக் - கோரி உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கோர்ட்டில் மனு செய்தார். விசாரணை நடைபெற்ற நிலையில் கலைமணி இறந்தார். அவரது மனைவி வழக்கை தொடர்ந்து நடத்தினார். விசாரித்த ஆர்.டி.ஓ. செய்யது முகமது, 'கலைமணி - ,லோகமணி தனது மகன்களுக்கு தானமாக கொடுத்த சொத்தின் பத்திரப் பதிவை ரத்து செய்ய சின்னமனுார் சார்பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகலை லோகமணியிடம் ஆர்.டி.ஓ. வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ