ஓடையில் மணல் திருட்டு மழைநீர் செல்வதில் சிரமம்
போடி: போடி அருகே நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு நீர்வரத்து ஓடையில் மழைநீர் தடுப்புகளை உடைத்து மணல் திருட்டு நடப்பதால் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.போடி ஒன்றியம், நாகலாபுரம் ஊராட்சி புலத்திற்கு கட்டுப்பட்டது மல்லிங்கர்சாமி கரடு. தொடர் மழை, 18 ம் கால்வாய் நீர் திறந்து விடும் நிலையில் மல்லிங்கர்சாமி கரடு ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடும். இதன் மூலம் 500 ஏக்கர் நிலங்கள் பயன் அடைந்தது. தற்போது மல்லிங்கர்சாமி கரடு ஒட்டி உள்ள ஓடை பகுதியின் இருபுறமும் தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். பலர் ஓடை பகுதியில் கட்டப்பட்டுள்ள மழைநீர் தடுப்புகளை உடைத்து மணல் திருடி வருகின்றனர். இதனால் ஓடையில் தண்ணீர் சீராக செல்லாமல் தேக்கம் ஏற்படுகிறது. நிலங்களில் தண்ணீரை தேக்கி வைக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்த முடியாத நிலை ஏற்படுகிறது.விவசாயிகள் பயன்பெறும் வகையில் மல்லிங்கர்சாமி கரடு ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சேதம் அடைந்த தடுப்புகளை சீரமைத்து, மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.