உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இடுக்கியில் பதட்டமான 83 ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

 இடுக்கியில் பதட்டமான 83 ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நிலையில், 83 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக இடுக்கி உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று (டிச.9) நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்படி ஆண்கள் 4, 43,521, பெண்கள் 4,68,602 , பிற பாலினத்தவர் 10, வெளி நாடுகளில் வசிப்பவர் 10 என 9,12,133 வாக்காளர்கள் உள்ளனர். 1192 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 83 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 52 ஊராட்சிகள், 8 ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி, இரண்டு நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 1036 வார்டுகளில் 3100 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டு பதிவுக்கு 2194 கன்ரோல் யூனிட், 6467 பாலட் யூனிட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. காத்திருப்பு பட்டியல் உள்பட 4768 அதிகாரிகள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டு பதிவு நடைபெறும். பாதுகாப்பு: மாவட்டத்தில் 17 டி.எஸ்.பி., 51 இன்ஸ்பெக்டர்கள், 238 எஸ்.ஐ.க்கள், 1842 போலீசார், ஊர் காவலர் படையைச் சேர்ந்த 177 பேர், சிறப்பு பிரிவு போலீசார், கலால், வனம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தினேசன்செருவாட் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ