வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி
தேனி:தேனி அருகே பழனி செட்டிபட்டியைச் சேர்ந்த விவேகானந்தன் மகள் சஷ்மிதா 16, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். பழனிசெட்டிபட்டி வாசவி காலனியைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் விவேகானந்தன். இவரது மனைவி ரேணுகாதேவி நர்ஸ் ஆக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சென்னையில் பணிபுரிகிறார். இளைய மகள் சஷ்மிதா 16, தேனி பூதிப்புரம் பைபாஸ் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று முன்தினம் இரவு பள்ளி சென்று வீட்டிற்கு வந்த மகள் சஷ்மிதாவை தந்தை வீட்டில் விட்டு சென்றார். வீட்டில் குளித்த சஷ்மிதா இரவு 7:30 மணிக்கு மொட்டை மாடி 2வது தளத்திற்கு சென்றார். அங்குள்ள கைபிடிச்சுவரில் அமர்ந்து வேடிக்கை பார்த்தவர் தவறி வீட்டின் பின்புற தரைத்தளத்தில் விழுந்தார். மகளின் அலறல் சத்தம் கேட்டு தாய் ரேணுகாதேவி மற்றும் பாட்டி சென்று பார்த்த போது, சிறுமியின் தலை தரைத்தளத்தில் மோதி ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். டி.எஸ்.பி., முத்துக்குமார் சம்பவயிடத்தை ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். எச்சரிக்கை இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், ''45 அடி உயர கட்டடத்தில் இறந்த சிறுமியின் வீடு உள்ளது. பள்ளி விட்டு வந்ததும் குளித்துவிட்டு மாடியில் காற்றுவாங்க சென்று 3 அடி உயரம் உள்ள சுற்றுச்சுவரில் ஏறி அமர்ந்தவர் நிலை தடுமாறி வீட்டின் பின்புற தரையில் விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பில் வசிப்போர் மாடியில் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தி யுள்ளோம்,'' என்றார்.