போலீஸ் ஜீப்பை மறித்து வாளால் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தேனி; தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ரோந்து சென்ற போலீசார் ஜீப்பை மறித்து வாளால் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.தேவதானபட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., செல்லப்பாண்டியன், போலீஸ்காரர் சந்திரசேகரன் மேல்மங்கலம் அம்பலகாரர் சாவடி முன் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர். அப்போது மேல்மங்கலம் மேலத்தெரு ஜெகதீஸ்வரன் 23, போலீஸ் வாகனத்தை மறித்து திட்டினார். 'என் நண்பர்கள் லோகேஷ், நாகபாண்டி அரிவாள் வைத்திருந்ததற்காக கைது செய்தீர்கள். இப்ப நான் வாள் வச்சிருக்கேன். என்னை கைது பண்ணுங்க பார்போம்' என சத்தம் போட்டார். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டடதை போலீசார் சரிசெய்து கொண்டு இருந்த போது ஜெகதீஸ்வரன், 'தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை பிடித்து வாளை கைப்பற்றி ஆயுத தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். விசாரணையில் ஜெகதீஸ்வரன் மீது ஜெயமங்கலம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மூன்று கொலை வழக்குகள் பதிவாகியிருப்பதும் அவர் 'குற்றவாளி சரித்திர பதிவேடு' ஆவணம் ஜெயமங்கலத்தில் பராமரிக்கப்படுவதும் தெரியவந்தது.