பயன்பாடு இன்றி பூட்டியிருக்கும் ரத்த சேமிப்பு வங்கி கட்டடம்
போடி : போடி அரசு மருத்துவமனையில் ரத்த சேமிப்பு வங்கி கட்டடம் ஓராண்டிற்கு மேல் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே உள்ளது.போடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1800க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள்,100 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். போடி மற்றும் சுற்றியுள்ள மலைக் கிராம மக்களும், கேரளாவை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில் போடி அரசு மருத்துவமனையின் செயல்பாடு, ரத்தம் பயன்பாடு அடிப்படையில் '' ரத்த சேமிப்பு வங்கி'' அமைக்க மாநில நல்வாழ்வுத்துறை அனுமதி வழங்கியது. அதன்படி அனைத்து வசதிகளுடன் குளிர்சாதன வசதியுடன் ரத்த சேமிப்பு வங்கி கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. கட்டடம் ஓராண்டுக்கு மேல் ஆகியும் திறப்பு விழா காணாததால் பூட்டி உள்ளது. எதிர்பாராத வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டோர், மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படுகிறது.ரத்த சேமிப்பு வங்கி கட்டட வசதி இருந்தும் செயல்படுத்தாமல் பூட்டி உள்ளதால் நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர் பலியாகும் அபாயம் உள்ளது. எனவே, மக்கள் பயன் பெறும் வகையில் '' ரத்த சேமிப்பு வங்கி'' கட்டடத்தை விரைவில் பயன்பாட்டில் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.