உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வசதி: தேனி, இடுக்கி கலெக்டர்கள் ஆலோசனை

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வசதி: தேனி, இடுக்கி கலெக்டர்கள் ஆலோசனை

கூடலுார்: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தேக்கடியில் தேனி, இடுக்கி கலெக்டர் தலைமையிலான இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நவ.16 மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வருவர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் தேக்கடி பாம்பு குரூவ் கூட்ட அரங்கில் தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், இடுக்கி கலெக்டர் தினேஷன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்கள் தொடர்ச்சியாக ஓட்டாமல் அவ்வப்போது ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும். தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநில எல்லையில் பசுமை சோதனைச் சாவடிகள் அமைத்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதுடன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. கூடலுார் அருகே குருவனத்துப் பாலம், இரைச்சல் பாலம் அருகே பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. அப்பகுதிகளில் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். வாடகை வாகனங்களில் கூடுதல் பக்தர்கள் பயணிக்கக் கூடாது. குமுளி பஸ் ஸ்டாப்பில் பஸ் வரும் நேர அட்டவணையை காட்சிப் படுத்த வேண்டும். பக்தர்களின் வாகனங்களில் வாகன எண் மறைக்கும் வகையில் பூமாலைகளை போடக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடுக்கி எஸ்.பி. சாபு மாத்யூ, சப்-கலெக்டர் அனுப் கார்க், உத்தமபாளையம் கூடுதல் எஸ்.பி. கலை கதிரவன், ஆர்.டி.ஓ., செய்யது முகமது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், டி.எஸ்.பி. வெங்கடேசன், கூடலுார் நகராட்சி கமிஷனர் முத்துலட்சுமி, உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் மற்றும் கேரள தரப்பு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ