மலேசியாவில் விபத்தில் காயமுற்ற தேனி வாலிபர்; அரசு உதவ குடும்பத்தினர் கோரிக்கை
தேனி; மலேசியாவில் பினாங்கு நகரில் நடந்த விபத்தில் ஆண்டிபட்டியை சேர்ந்த கார்த்திக் 30, காயமடைந்தார். அவரது சிகிச்சைக்கு அரசு உதவக்கோரி தேனி கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டி கார்த்திக், டிப்ளமோ முடித்துள்ளார். மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்தார். அங்கு பினாங்கு நகரில் மார்ச் 24ல் நடந்த ரோடு விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதுகுறித்து அவரது தாயார் முனியம்மாள் தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தார். மனுவில், காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சை தேவைப்படுவதால், அதற்கு ரூ.60 லட்சத்திற்கும் மேல் ஆகும் என கூறுகின்றனர். குடும்பத்தினர் நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். மகனின் உயிரை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. கலெக்டர் உத்தரவில் மனுவினை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.