வைகை அணை நீர் திறப்பு மீண்டும் குறைப்பு
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மீண்டும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 1500 கன அடி வீதம் வெளியேறுகிறது.வைகை அணையில் இருந்து ஜூன் 15 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதிகளில் உள்ள இருபோக நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி 2, 3ல் உள்ள நிலங்களுக்கு ஜூன் 25ல் வினாடிக்கு 3000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. நீரின் அளவு ஜூன் 27ல் வினாடிக்கு 2000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நீர்திறப்பு நேற்று மீண்டும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 1500 கன அடி வீதம் ஆற்றில் செல்கிறது. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடியுடன் மொத்தம் அணையில் இருந்து 2469 கன அடி நீர் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 60.04 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1884 கன அடி.