பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வில் தன்னார்வ அமைப்புகள்
சின்னமனுார் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. ஐம்பாதியிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகரைச் சுற்றி 2 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி நடந்து வருகிறது. முல்லைப் பெரியாறு பாசன நிலங்களில், சில பகுதிகள் கண்மாய் பாசனமாக உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் வந்தாலும் கண்மாயில் சேகரமாகி, பின்னர் பாசனத்திற்கு பயன்படுகிறது. இவ்வகை பயன்பாட்டில் சின்னமனுாரில் உடையகுளம், செங்குளம் உள்ளன. நகரில் சேகரமாகும் சாக்கடை நீர், செப்டிக்டேங்க் கழிவுகள், கோழி, இறைச்சிக் கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், உடைந்த பாட்டில்கள் என அனைத்தும் சின்ன வாய்க்கால் வழியாக உடைய குளத்தில் சேகரமாகின்றன. பாசனத்திற்காக வரும் ஆற்று நீரும், சாக்கடைக் கழிவு நீர், இறைச்சிக் கழிவுகள் ஒன்று சேர்ந்து, கண்மாய் நீரை கருப்பு கலராக மாற்றி வருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் மாசு படுகிறது. ஒரு சில தன்னார்வ அமைப்புக்கள், பள்ளி மாணவர்கள் மரங்கன்றுகள் வளர்க்க துவங்கி உள்ளனர். சில பள்ளி நிர்வாகங்கள், தன்னார்வ அமைப்புகளும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளை துவங்கி உள்ளன. ரமணன், இயற்கை ஆர்வலர்: சுற்றுப்புறச் சூழல் மாசு படாமல் இருக்கவும், மழை வளம் கிடைக்கவும் சின்னமனுார் நகரின் நான்கு திசைகளிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இந்நகரில் புதிதாக ஒரு அமைப்பை துவங்க வேண்டும். ஓட்டல்கள் கடைகளில் பாலிதீன் ஒழிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கானகம், குறுங்காடு நகரில் கிடைக்கும் இடங்களில் உருவாக்க வேண்டும். ஏற்கனவே அரசு மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குறுங்காடு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நகராட்சி சந்தை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். இங்கு உடைய குளத்தை துார்வார வேண்டும். குளத்தில் தேங்கும் பாலிதீன், பீங்கான் பாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும். இந்த பணியில் பல தன்னார்வலர் அமைப்புக்கள், பொது மக்கள் பங்கேற்கும் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளோம். வீடுதோறும் மூலிகை செடிகள், மாடி தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம், என்றார். ஜெயராம், பொறியாளர், சின்னமனுார் : சின்னமனுாரில் குறுங்காடு ஒன்றை அமைக்க வேண்டும். ரோட்டரி கிளப் வனத்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் மரங்கள் வளர்த்துள்ளனர். மெட்ரிக் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து வீடுகளில் மூலிகை தோட்டம் ஏற்படுத்த வேண்டும். காடுகளை அதிகரிக்க வேண்டும். காடுகள் குறுகியதால் வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதை தவிர்க்க வன உயிரின வாழ்விடங்களை பாதுகாத்திட வேண்டும். பசுமை சின்னமனுாரை உருவாக்க பள்ளி மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல் வகுப்புக்கள் தினமும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகருக்குள் இடம் இல்லாவிட்டாலும், நகரை சுற்றி கண்மாய் கரைகள், மேகமலை ரோடு, முத்துலாபுரம் ரோடு , சீலையம்பட்டி ரோடுகளில் மரக்கன்று களை நட்டு வளர்க்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் செடி, கொடிகள், பழ மற்றும் மூலிகைச் செடிகள் வளர்க்க வேண்டும், என்றார்.