ராஜமலைக்கு வந்த காட்டு யானைகள்
மூணாறு: மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் வரையாடுகள் ஏராளம் உள்ளன.அவற்றைப் பார்க்க சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். ஐந்தாம் மைலில் நுழைவு சீட்டு பெற்று வனத்துறையினரின் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் பயணிகள் ராஜமலையில் 'ஸ்டோரி ஆப் பார்க்' கட்டடத்தின் அருகே இறக்கிவிடப்படுகின்றனர்.அதன் அருகில் உள்ள புல் மேடுகளில் காட்டு யானைகள் அபூர்வமாக வருவதுண்டு. அங்கு நேற்று இரண்டு காட்டு யானைகள் வந்தன. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் மேகங்கள் சூழ வெகு நேரமாக நின்ற காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கானோர் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.