வெற்றிலை கொடி நடவுக்காக நாணல் குச்சிகள் சேகரிக்கும் தொழிலாளர்கள்
போடி: வெற்றிலை கொடி நடவிற்காக நாணல் குச்சிகளை சேகரித்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம், ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதியில் வெற்றிலை, தக்காளி கொடி, நாற்றாங்கால் நடவு பணிகள் மேற்கொள்ள நாணல் குச்சிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இவை நடவு பணிகளுக்கு அதிகம் தேவைப் படுகின்றன.இதற்காக தேனி அருகே உள்ள வாழையாத்துபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஆறு, நீர்வரத்து ஓடை அருகே வளர்ந்து உள்ள நாணல் குச்சிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து வியாபாரிகள் பச்சையாக தரம் பிரிக்கப்படாத 100 எண்ணிக்கை கொண்ட நாணல் குச்சிகளை 90 முதல் ரூ.100 வரை விலைக்கு வாங்குகின்றனர். வியாபாரிகள் இதனை தரம் பிரித்து 100 எண்ணிக்கை கொண்ட குச்சிகளை ரூ.150க்கு ஈரோடு, பவானி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர். பெரிய அளவிற்கு வருமானம் இல்லாவிட்டாலும் அன்றாடம் கூலி கிடைப்பதால் இத்தொழிலில் தொடர்வதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.