தேனி வாகன காப்பகத்தை அகற்ற மண்டல இயக்குனர் உத்தரவு
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்டில் ஒப்பந்தம் முடிந்த பின்பும் இயங்கும் வாகன காப்பகத்தை அகற்றி,ஜூன் 30க்குள் அறிக்கை தர நகராட்சிகள் மண்டல இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.இந்நகராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்டில் டூவீலர் காப்பகம் இயங்கிவருகிறது. 2024 அக்.25ல் நகராட்சி கூட்டத்தில் டூவீலர் காப்பகத்தை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்கள் ஆகியும் டூவீலர் காப்பகம் அகற்ற வில்லை. ஒப்பந்ததாரர் அகற்றிட நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, கமிஷனர் ஏகராஜூக்கு அறிவுறுத்தினார். அப் பகுதியை கண்காணிக்கும் ஆர்.ஐ., ராமசாமி 2 முறை குறிப்பிட்டஏலதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியும் விதிமீறி வாகன காப்பகம் செயல்பட்டது. இந்த வாகன காப்பகம் அகற்றும் பிரச்னையில் கவுன்சிலர் பாலமுருகனுக்கும், ஆர்.ஐ., ராமசாமிக்கும் பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் சென்றது. இந் நிலையில் நகராட்சிகள் மதுரை மண்டல இயக்குனர் முஜிபுர்ரஹ்மான், கமிஷனர் ஏகராஜ், ஜூன் 30க்குள் விதிமுறை மீறி நடத்தப்படும் டூவீலர் காப்பகத்தை அகற்றி, மறுடெண்டர் விடஏற்பாடு செய்து, அதன் விபரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.