உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / காளிக்கு 40 கிடா, 200 வௌ்ளாடுகள் பலி கொடுத்து விநோத கொடை விழா * பேட்டை நரிக்குறவர்கள் பரவசம்

காளிக்கு 40 கிடா, 200 வௌ்ளாடுகள் பலி கொடுத்து விநோத கொடை விழா * பேட்டை நரிக்குறவர்கள் பரவசம்

பேட்டை:பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன் கோயில் கொடை விழாவில் 40க்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள், 200க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் பலிகொடுத்து விநோத பூஜை நடந்தது.நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்சமயம் மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திண்டுக்கல், அறந்தாங்கி, அருப்புக்கோட்டை, திண்டிவனம், தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.முந்தைய காலத்தில் குறைந்த விலைவாசி, செழிப்பான பொருளாதாரம் காரணமாக 6 மாதத்திற்கு ஒருமுறை கோயில் கொடை விழா நடத்தி வந்த இவர்கள், காலப்போக்கில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி தற்போது 7 ஆண்டுகள் கழித்து கொடை விழா நடத்தினர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு பேட்டை எம்.ஜி.ஆர்., காலனியில் குவிந்தனர். விழாவின் துவக்க நிகழ்வாக கடந்த (26ம் தேதி) மாலை பெருமாள் சுவாமிக்கு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு மண்பானையில் பொங்கலிட்டு வெள்ளாடுகளை பலி கொடுத்து படையலிட்டனர். நேற்றுமுன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை, மைதா, ரவை ,சீனி போன்றவற்றின் கலவையால் ரொட்டி சுட்டு படையலிட்டனர். கொடை விழாவான நேற்று காலை மதுரை மீனாட்சி, கருப்பசாமி தெய்வங்களுக்கு 200க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளையும், காளியம்மனுக்கு 40க்கும் மேற்பட்ட எருமை கிடாக்களையும் பலி கொடுத்து அதன் ரத்தத்தைக் கோயில் முன் தோண்டப்பட்டிருந்த குழியில் சேகரித்தனர். அதில் சுவாமியின் உருவத்தை அபிஷேகம் செய்து தங்களது உடல் முழுவதும் பூசிக் கொண்டு சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, பலி கொடுத்த எருமைக்கிடா மற்றும் வெள்ளாடுகளின் ரத்தத்தை குடித்து அதில் நேற்று முன்தினம் படைத்திருந்த ரொட்டியை ரத்தத்தில் கலந்து உண்டனர். பின்னர் வௌ்ளாடுகள், எருமைக்கிடாக்களை படையலிட்டனர். முன்னதாக தங்களது குல தெய்வ வழிபாட்டில் குலத்தொழிலான வேட்டையாடும் கருவிகளை வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விழாவில் இன்று (29ம் தேதி) மாலை பெண்கள் தாம்பூலத்தில் பலி கொடுத்த எருமை கிடா மற்றும் வெள்ளாடுகளின் ரத்த கலவையை எடுத்து அதன் மேல் அவற்றின் தலைகளை வைத்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி ஆடல் பாடலுடன் நடக்கிறது. ஏற்பாடுகளை நரிக்குறவர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ