| ADDED : ஜூன் 19, 2025 01:40 AM
திருநெல்வேலி:தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில், 50 வயது மகளை கட்டையால் அடித்து கொலை செய்த, 80 வயது தந்தை, மேலப்பாளையம் போலீசில் சரண் அடைந்தார். துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூரை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் ஜெயலட்சுமி, 50. இவர், தன் கணவர் காளிமுத்து, 55, மற்றும் மகனுடன் திருநெல்வேலி மேலப்பாளையம் மேல கருங்குளத்தில் வசித்து வசித்தார். 80 வயதான தந்தையையும் கவனித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் அவருக்கு உணவு அளித்து விட்டு ஜெயலட்சுமி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். தனக்கு சரியாக சாப்பாடு தரவில்லை. முறையாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த வேலு, ஜெயலட்சுமி தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, தான் பயன்படுத்தும் வாக்கருடன் வீட்டில் இருந்து ஆட்டோவில் கிளம்பி, மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரண் அடைந்து விட்டார். அங்கு அவர் போலீசாரிடம், தன் மகளை கொலை செய்ததாக கூறினாலும் அவர்கள் நம்பவில்லை. அங்கு வெளியே மரத்தடியில் உட்கார்ந்து இருந்த அவரிடம் தீவிரமாக விசாரித்த பிறகே அவர் கொலை செய்தது தெரிந்தது; கைது செய்தனர்.பசியில் இருந்த அவருக்கு இரவு உணவு வாங்கி கொடுத்த பின், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவரை போலீசார் அனுமதித்தனர்.