திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, வித்தியாசமான நடைமுறையாக பெண் போலீஸ் அதிகாரிகளே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். புறநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, மங்கையர்க்கரசி, சிவகளை, கலா, மாரிஸ்வரி ஆகியோரும், மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, அன்னலட்சுமி, கோமதி, விஜி ஆகியோரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாநகர் ரோந்து அதிகாரியாக உதவி கமிஷனர் செந்தில்குமார் இரவு ரோந்து பணியை கவனித்தார்.மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் டி.ஐ.ஜி., மூர்த்தி இரவு, 11:40 மணிக்கு மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கமிஷனர் செந்தில்குமாரை வயர்லெஸ் வாயிலாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார். ஆனால், செந்தில் குமார் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது ஜீப் தியேட்டர் வளாகத்தில் நின்று கொண்டிருந்தது.கட்டுப்பாட்டு அறையில் இருந்து வயர்லெஸ் மைக்கில் பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால், உதவி கமிஷனரின் மொபைல் போனில் அழைத்தனர். அவர் தியேட்டரில் இருந்து வெளியே வந்து, டி.ஐ.ஜி., மூர்த்தியிடம் பேசினார். அப்போது, தான் தியேட்டரில் இல்லை என்றும், தச்சநல்லுார் அருகே நிற்பதாகவும் கூறினார்.ஆனால், உதவி கமிஷனரின் ஜீப் தியேட்டரில் நிற்கும் படத்தை டி.ஐ.ஜி.,க்கு யாரோ ஒருவர் வாட்ஸாப்பில் அனுப்பி இருந்தார். இதையடுத்து, அதை குறிப்பிட்டு டி.ஐ.ஜி., மூர்த்தி அவருக்கு டோஸ் விட்டார். திருநெல்வேலியில், கடந்த வாரம் இரவில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது மர்ம நபர்கள் மது பாட்டில் குண்டு வீசினர். மேலப்பாளையம் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இரவு ரோந்து முக்கியமானது; அலட்சியமாக இருக்கக் கூடாது எனவும் டி.ஐ.ஜி., அறிவுறுத்தினார்.