லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஆஜராகாத தீயணைப்பு அலுவலர்; முன்ஜாமின் மனு துணை இயக்குனரை சிக்க வைத்தவர்
திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்புத்துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த சம்பவத்தில் தொடர்புடைய தீயணைப்பு அதிகாரி, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல், முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார். திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபுவை 50, லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைப்பதற்காக தீயணைப்புத் துறையினரே, விஜய் என்ற நபர் மூலம் நவ.17 இரவு, அவரது அலுவலகத்தில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வைக்க ஏற்பாடு செய்தனர். நவ.18 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் அந்தப் பணத்தை கண்டெடுத்தனர். சரவணபாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். தீயணைப்பு அலுவலகத்தின் எதிர்புறம் உள்ள வீட்டில் பதிவான சி.சி.டி.வி., காட்சிகள் மூலம், இந்தப் பணம் வைக்கும் சதித்திட்டம் அம்பலமானது. பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கும் இந்த வழக்கில் தீயணைப்பு வீரர்கள் துாத்துக்குடி ஆனந்த், திருநெல்வேலி டவுன் மூர்த்தி, சென்னை அம்பத்துார் முருகேஷ், பணம் வைத்த விஜய், தூத்துக்குடி முத்துச்சுடலை ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்ஜாமின் மனுத்தாக்கல் ஒரு மாதம் ஒத்திகை பார்த்து நடந்த திட்டத்திற்கு, லட்சக்கணக்கில் பணம் கொடுத்த கொங்கு மண்டல அதிகாரிகள், சம்பவத்தின் போதும் கைதான நபர்களிடம் அதிக முறை பேசிய தீயணைப்புத் துறை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. திருப்பூர் உதவி தீயணைப்பு அலுவலர் வீரராஜூக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்ட இவர், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடந்த நவ.18ம் தேதி, ஏற்கனவே கைதான ஆனந்த் உள்ளிட்ட நபர்களுடன் அடிக்கடி அலைபேசியில் பேசி உள்ளார். எனவே அவரை விசாரணைக்கு வருமாறு பெருமாள்புரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். கடந்த டிச.11ம் தேதி அவர் விசாரணைக்கு வரவில்லை. மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். நீதிபதி ஸ்ரீமதியிடம் அவரது முன்ஜாமின் மனு இன்று (டிச.15) விசாரணைக்கு வருகிறது.