மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவலர் கைது
26-Sep-2024
திருநெல்வேலி:வாரிசு சான்றிதழ் தர ரூ. 4000 லஞ்சம் வாங்கிய ராதாபுரம் தாலுகா அலுவலக இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருப்பவர் அஜித் சண்முகநாதன் 28. இவரிடம் பணகுடியை சேர்ந்த சிவபாலன் என்பவர் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார்.அதற்கு அஜித் சண்முகநாதன் ரூ.4000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத அவர் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., எஸ்காலிடம் புகார் தெரிவித்தார்.டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், எஸ்.ஐ., முத்து கணேஷ், எஸ். எஸ். ஐ. சீதாராமன், பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசாயன பவுடர் தடவிய 4000 ரூபாய் நோட்டுகளை சிவபாலனிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று தாலுகா அலுவலகத்தில் வைத்து அந்த லஞ்ச பணத்தை வாங்கிய அஜித் சண்முகநாதன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் உவரியில் அவர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அஜித்தின் தந்தை அருள்லிங்கம் உவரியை சேர்ந்தவர். தலையாரியாக பணியாற்றியவர். விபத்தில் இறந்ததால் கருணை அடிப்படையில் அஜித்திற்கு இளநிலை உதவியாளர் வேலை கிடைத்தது. அந்த வேலையிலும் ஆரம்பத்தில் இருந்தே லஞ்சம் வாங்கி திளைத்தவர் என புகார்கள் வந்தன.
26-Sep-2024