பத்திரப்பதிவு துறை சர்வர் 9வது நாளாக முடங்கியது
திருநெல்வேலி:தமிழகம் முழுதும் பத்திரப் பதிவு துறை சர்வர் செயல் படாததால் நேற்று 9வது நாளாக பத்திரப்பதிவு முழுமையாக நடக்கவில்லை. தமிழகம் முழுதும் பத்திரப்பதிவு துறையின் செயல்பாடுகள் இணையதளம் வாயிலாக நடக்கிறது. பத்திரங்கள் மேற்கொள்ள, முன்னதாக அதை ஆன்லைன் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம். செப்., 29ல் தமிழகம் முழுதும் பத்திரப்பதிவுகள் பாதிக்கப்பட்டன. ஒரு வாரம் முழுதும் இதே போல சர்வர் பாதிப்பால் போதிய பத்திரங்கள் பதிவாகவில்லை. நேற்று திங்கட்கிழமை காலையில் இருந்தே பத்திரப்பதிவு துறையின் டி.சி.எஸ்., இணையதளம் செயல்படவில்லை. இதனால் எந்த பத்திரங்களும் அனுப்ப முடியாமல் பத்திரப்பதிவு நடக்கவில்லை. தமிழகம் முழுதும் ஒரு நாளில், 500 -- 600 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திர பதிவுகள் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது. ஆனால், 9 நாட்களாக சர்வர் பாதிப்பால் பதிவுத்துறை முடங்கியுள்ளது. முன்பதிவு செய்து வெளியூர்களிலிருந்து பத்திரப்பதிவு மேற்கொள்ள வரும் பொதுமக்களும் மிகுந்த பாதிப்பிற்குஉள்ளாகியுள்ளனர்.
'விரைவில் சரியாகும்'
வேலுார் மாவட்டம், காட்பாடி - குடியாத்தம் ரோட்டில், 1.87 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். அப்போது, அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ''சமீபமாக பத்திரப்பதிவு இணையதளம் அடிக்கடி முடங்குவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், 2வது வருமானம் அளிக்கும் துறை பத்திரப்பதிவு துறை. இணையதளத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிப்பதால், 'சர்வர் டவுன்' ஆகி இருக்கலாம். விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.