மொத்தமாக மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானம் விற்பனை குறித்து மண்டல மேலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் குறித்த அலுவலர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.இதில், கலெக்டர்பிரதாப் பேசியதாவது:மாவட்டத்தில் வாகன சோதனையின் போதுகள்ளச்சாராயம், மது பானம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கொண்டு வருவோர்மற்றும் அவர்களின்வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சந்து கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல், அது எந்த கடையில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்பட்டதோ, அந்தக் கடையின் விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சோதனைச்சாவடிகளில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானம், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் வருவதை தடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனையாவதை மண்டல மேலாளர் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையர் கணேசன், ஆவடி உதவி கமிஷனர் பொன்சங்கர், திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர்பங்கேற்றனர்.