உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலையாற்றில் கட்டப்படும் பாலப் பணி மந்தம் ஆறு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்: நெ.சா.துறை அதிகாரிகள்

கொசஸ்தலையாற்றில் கட்டப்படும் பாலப் பணி மந்தம் ஆறு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்: நெ.சா.துறை அதிகாரிகள்

திருவாலங்காடு:பாகசாலை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 19.5 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணி மந்தமாக நடந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், ஓரத்தூர் -- பாகசாலை இடையே கொசஸ்தலையாறு செல்கிறது.இங்கு, ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் நீளம், 5 அடி உயரத்திற்கு 1998ம் ஆண்டு, 1.5 கோடி ரூபாய் மதிப்பில், திருத்தணி நெடுஞ்சாலை துறையினரால் தரைப்பாலம் கட்டப்பட்டது.இந்த தரைப்பாலம் வழியாக, சின்னம்மாபேட்டை, ஓரத்தூர், பொன்னாங்குளம், மணவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வாயிலாக பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு சென்று வந்தனர்.கடந்த 2019, 2021, 2022ம் ஆண்டில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதமடைந்தது. தொடர்ந்து, 20 - -30 நாட்கள் வரை தரைப்பாலத்தை கடந்து தண்ணீர் சென்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.மேலும், தரைப்பாலத்தை பலப்படுத்த அமைக்கப்பட்ட கற்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால், தரைப்பாலம் பலமிழந்து உடையும் அபாய நிலை இருந்தது.எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பலமிழந்துள்ள தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, பாகசாலை கொசஸ்தலையாற்றை கடக்க நபார்டு மற்றும் கிராம சாலை திட்டம் வாயிலாக, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, 240 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்திற்கு, 22.8 மீட்டர் இடைவெளியில் 10 தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.தற்போது, பாலப் பணி மந்தகதியில் நடப்பதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.உயர்மட்ட பாலப் பணி 60 சதவீதம் முடிந்துள்ளது. விரைவாக பணி நடந்து வருகிறது. ஆறு மாதத்திற்குள் உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வரும்.- நெடுஞ்சாலை துறை அதிகாரி,திருத்தணி.

12 கி.மீ., சுற்றிச் செல்கிறோம்

பாகசாலை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தீவில் சிக்கியதாய் தவிக்கின்றனர். வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு, 12 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓராண்டாக உயர்மட்ட பாலப் பணி நடந்து வருகிறது. இந்தாண்டு பருவமழையின் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பணி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், தரைப்பாலம் வழியாக வாகன ஓட்டிகள் சென்று வர முடியாத நிலை ஏற்படும். எனவே, பணியை ஜவ்வாக இழுக்காமல், விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.முத்துராமன், பாகசாலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை