ரயில் நிலைய கூரை சேதம் புட்லுார் பயணியர் அவதி
புட்லுார்:சென்னை, சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூருக்கு முன்னதாக, புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புட்லுாரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்மவரி அம்மன் கோவிலுக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.மேலும், சனி, ஞாயிற்று கிழமைகளில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். காக்களூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், புட்லுாரில் இருந்து 20,000க்கும் மேற்பட்டோர் சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில்களில் பயணம் செய்கின்றனர்.புட்லுார் ரயில் நிலையத்தில், புறநகர் ரயில்கள் செல்ல இரண்டு பாதை, விரைவு ரயில்கள் சென்ற வர இரண்டு என, மொத்தம், நான்கு ரயில் தண்டவாளங்கள் உள்ளன. நீண்ட நடைமேடைகள் கொண்ட இங்கு, முதல் மற்றும் இரண்டாவது நடைமேடைகளில், சிறிய அளவிலான கூரை மட்டுமே உள்ளது.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், 2 - 3 நடைமேடையில் அமைக்கப்பட்டிருந்த கூரை சேதமடைந்தது. இதனால், வெயில், மழையில் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, மழை காலம் வருவதற்குள், சேதமடைந்த கூரையை சீரமைக்க வேண்டும் என, புட்லுார் ரயில் பயணியர் சங்கத்தினர் சென்னை கோட்ட மேலாளருக்கு மனு அளித்துள்ளனர்.