வடிகாலில் ஆபத்தான கம்பிகள் பூந்தமல்லியில் விபத்து அபாயம்
பூந்தமல்லி: பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில், மழைநீர் வடிகால்வாய் கட்டுமான கம்பிகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், அவ்வழியே பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.பூந்தமல்லியில் இருந்து மாங்காடு செல்லும், லட்சுமிபுரம் சாலை உள்ளது. இந்த சாலை வழியே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என, ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்த சாலையோரம் பூந்தமல்லி நகராட்சி சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு பகுதியில் மட்டும் கால்வாய் கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இங்கு, கட்டுமான கம்பிகள் விபத்து ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான முறையில் நீட்டிக்கொண்டு உள்ளன. இந்த இடத்தில் தடுப்புகள் ஏதும் வைக்கப்படவில்லை.இதனால், இந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர், தவறி விழுந்து விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.