| ADDED : மார் 25, 2024 06:19 AM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் அதிகாலை, 5:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மேலும் பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு வந்ததால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோவில் தேர் வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் பொதுவழியில், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே போல் , 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர்.முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஆற்று உற்சவம்திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி மாதத்தில் ஆண்டுதோறும் ஆற்று உற்சவம் திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் நேற்று காலை 9:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக மேல்திருத்தணி வழியாக மாட்டு வண்டியில் பொதட்டூர் பேட்டை ரோடு, தெக்களூர் பகுதியில் உள்ள நந்தி ஆற்றங்கரை கோவில் தோட்டத்தில் மண்டபத்தில், மாலை, 5:00 மணிக்கு சென்றடைந்தார். பின் அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளினார். மாலை, 6:30 மணிக்கு அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நந்தி ஆற்றில் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி உற்சவர் முருகப்பெருமான் அருள்பாலித்தார். இரவு, 8:30 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்தடைந்தார். ஏற்பாடுகளை திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினர் செய்திருந்தனர்.