திருவள்ளூர்,:கீரை விவசாயிகள், கூடுதல் லாபம் பெற, விதை பரிசோதனை செய்து பயிரிட வேண்டும் என வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை ஆய்வக மூத்த வேளாண் அலுவலர் வே.சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், கீரை விவசாயத்தில் விவசாயிகள் பலர் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் காய்கறிகளில், கீரைகளில் மட்டுமே 'விட்டமின் ஏ' சத்து அதிகம் கிடைக்கும்.விவசாய தோட்டம் தவிர, மாடி தோட்டம், வீடுகளில் இருக்கும் சிறிய இடத்திலும் கீரை வகைகளை பயிரிடலாம். அரைகீரை, சிறு கீரை, பாலக்கீரை, சிவப்புதண்டு கீரை, பச்சைதண்டு கீரை, பருப்பு கீரை, காசினி கீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி என இவற்றை தொட்டியிலும் வளர்க்கலாம்.திருவள்ளூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை ஆய்வகத்தில், கடந்த ஆண்டு, 500 கீரை விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், 100 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள கீரை விதைகளில், 50 கிராம் மட்டும் எடுத்து திருவள்ளூர் ஆயில் மில் அருகில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து, விதையின் தரத்தை தெரிந்து பயிரிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.