உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி - ஆர்.கே.பேட்டை எல்லை வரை நான்கு வழிச்சாலையாகமாற்றம்!

திருத்தணி - ஆர்.கே.பேட்டை எல்லை வரை நான்கு வழிச்சாலையாகமாற்றம்!

திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகளவில் நடந்து வருகின்றன. திருத்தணி நெடுஞ்சாலைத்துறையினர், திருத்தணி - ஆர்.கே.பேட்டை எல்லை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசல் விபத்துகளை தடுக்க தீர்வுதிருத்தணி - ஆர்.கே.பேட்டை நான்கு வழிச்சாலையாக...திருத்தணி, ஏப். 29-திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர் மொத்தம், 213 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை பராமரித்து வருகின்றனர். சாலைகளை தரம் உயர்த்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்தல் மற்றும் சாலைகள் பழுது பார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணியில் இருந்து, ஆர்.கே.பேட்டை எல்லை வரை மொத்தம், 23 கி.மீ., துாரம் நெடுஞ்சாலையை திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.இந்த நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இரு வழிச்சாலை

மேலும், விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்கள் வாயிலாக கரும்புகள் ஏற்றிக் கொண்டு, இவ்வழியாக திருவாலங்காடில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்கின்றனர்.இதுதவிர, கனரக வாகனங்கள் அதிகளவில் இச்சாலையில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகளவில் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் இரு வழிச்சாலை மற்றும் சாலையோரம் சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டி வியாபாரம் செய்கின்றனர். தற்போது, இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் புதிய முயற்சி எடுத்துள்ளனர். திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், ஆர்.கே.பேட்டை எல்லை வரை, அதாவது திருவள்ளூர் மாவட்ட எல்லை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றி, அதில் மீடியன் அமைக்கவும் முடிவு செய்து, தற்போது அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக, திருத்தணி - ஆர்.கே.பேட்டை எல்லை வரை, 23 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, சாலையோரம் ஆக்கிரமிப்புகள் குறித்து சர்வே செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை நிரந்தரமாக தவிர்க்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:திருத்தணி - ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர்.

பரிந்துரை

மேலும், சிலர் சாலையோரம் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் நெரிசல் மற்றும் விபத்துகளில் சிக்கி வந்தனர். இதைத் தடுக்கும் வகையில், 23 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்ற உள்ளோம். இந்த பணிக்கு, 100 கோடி ரூபாய் தேவைப்படும். இதற்காக சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றியும், நிலத்தை சர்வே செய்தும் வருகிறோம்.மூன்று ஆண்டிற்குள் படிப்படியாக, நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். நடப்பாண்டில் முதற்கட்டமாக தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை, 4 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்துஉள்ளோம்.நிதி ஒதுக்கீடு செய்தவுடன் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். இதேபோன்று, 23 கி.மீ., துாரமும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நான்கு வழிச்சாலை அமைக்கும் முறை

நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு மொத்தம், 20 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். இதில், 15 மீட்டர் அகலத்திற்கு தார்ச்சாலையும், 2.1 மீட்டர் அகலத்தில் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய், 0.4 மீட்டர் அகலத்தில் இருபுறமும் தார்ச்சாலையின் சாய்வுதளம் அமைக்கப்படும். மழைநீர் வடிகால்வாய் என்பது குடியிருப்பு பகுதிகள் மற்றும் பஜார் போன்ற இடங்களில் மட்டும் அமையும். மீதமுள்ள இடத்தில் சாலை அகலப்படுத்தப்படும். தற்போது, இதற்காக தான் திருத்தணி - ஆர்.கே.பேட்டை எல்லை வரை ஆக்கிரமிப்பு மற்றும் சர்வே செய்யும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்