திருத்தணி அரசு மருத்துவமனை சாலை குண்டும், குழியுமாக மாறியதால் அபாயம்
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர, திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய நான்கு ஒன்றியங்களில் இருந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.திருத்தணி புதிய புறவழிச்சாலையில் இருந்து, ஜோதிநகர் வழியாக அரசு மருத்துவமனைக்கு வரும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், இச்சாலை வழியாக முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.இச்சாலையை திருத்தணி நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சாலை சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நலன் கருதி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.