வீட்டு மனை பட்டா கேட்டு கிராமவாசிகள் போராட்டம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அங்குள்ள கிராம நத்தம் அரசு நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.இங்கு மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து வருவாய்த்துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, கிராமவாசிகள் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று போராட்டம் நடத்தி திட்டமிட்டனர்.இதற்காக நேற்று காலை, உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ஜானகிராமன் தலைமையில், அங்கு, 100க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அங்கு கூடி, வருவாய்த்துறையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.பின் பேரணியாக ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.பேரணியாக செல்வதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அதிகாரிகளை இங்கு வரவழைப்பதாகவும் போலீசார் உறுதியளித்தனர்.அதை தொடர்ந்து, பொன்னேரி தாசில்தார் சிவக்குமார், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராமவாசிகளிடம் பேச்சு நடத்தினர்.மேற்கண்ட இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.