கூளூர் கொள்முதல் நிலையத்தில் 1,500 நெல் மூட்டைகள் தேக்கம்
திருவாலங்காடு: கூளூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் வராததால், 1,500 நெல் மூட்டைகள் தேக்கம்அடைந்துள்ளன. திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் கிராமத்தில் ஏரி, கிணறு மற்றும் கொசஸ்தலையாற்று பாசனம் வாயிலாக, 200 ஏக்கர் பரப்பிலான நிலங்களில் விவ சாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள காஞ்சிப்பாடி, மாவூர், ராமஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது, அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள், கூளூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்கின்றனர். கொள்முதல் செய்த நெல்லை, நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளுக்கு ஏற்றிச் செல்ல, ஒரு வாரமாக லாரிகள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், 40 கிலோ கொண்ட, 1,500 நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்துள்ளன. அதேபோல், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல், டிராக்டரில் நெல்லை வைத்துக் கொண்டு மழையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனவே, கொள்முதல் நிலையத்தில் தேக்கமான நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.