உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டையில் 16 செ.மீ., மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊத்துக்கோட்டையில் 16 செ.மீ., மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவள்ளூர்: தொடர்ந்து பெய்து வரும் மழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, சோழவரம், பொன்னேரி போன்ற கடலோர பகுதிகளில், அதிக மழை பெய்து உள்ளது. திருவள்ளூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. திருவள்ளூர் பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்கு புகுந்ததால், மக்கள் தண்ணீரை வெளியே இறைத்து வருகின்றனர். கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பையால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஊத்துக் கோட்டையில் 16.7 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஆரணி, கொசஸ்தலையாறு பாசன கட்டுப்பாட்டில், 574 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 14 ஒன்றியங்களிலும், 528 ஏரிகள் உள்ளன. இது தவிர குளம், குட்டை, ஊரணி என, 3,302 நீர்நிலைகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நீரின்றி வறண்டு கிடந்த ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதுவரை, நீர்வளத்துறை - 36, ஊரக வளர்ச்சி துறை - 48 என, 84 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. நீர்வளத்துறை - 71, ஊரக வளர்ச்சி - 163 என, மொத்தம் 234 ஏரிகள், 75 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகள், 50 - 25 சதவீதம் வரை நிரம்பி வருகின்றன. இது தவிர, பிற நீர் நிலைகளில், 62 ஏரிகள் ௧௦௦ சதவீதமும், 605 நீர்நிலைகள் 75 சதவீதமும், இதர நீர்நிலைகள் 50 - 25 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

மழையளவு விபரம்

இடம் மழையளவு (செ.மீ.,) ஊத்துக்கோட்டை 16.7 ஆவடி 11.7 திருவாலங்காடு 11.2 கும்மிடிப்பூண்டி 8.9 பொன்னேரி 7.6 பூண்டி 7.2 பள்ளிப்பட்டு 6.5 திருவள்ளூர் 6.2 ஜமீன் கொரட்டூர் 6.0 தாமரைப்பாக்கம் 5.8 செங்குன்றம் 5.5 சோழவரம் 5.4 திருத்தணி 5.3 பூந்தமல்லி 5.3 ஆர்.கே.பேட்டை 4.2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ