திருத்தணியில் இரு நாட்களில் 210 தெரு நாய்களுக்கு தடுப்பூசி
திருத்தணி: திருத்தணி நகரில் சுற்றித்திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரு நாட்களில், 210 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படு கிறது. மேலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. இதையடுத்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, நாய்களின் இனப்பெருக்கம் மற்றும் நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணியை, நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் ஒன்றிணைந்து, தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன. நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில்நகராட்சி ஊழியர்கள், 10க்கும் மேற்பட்டோர், இப்பணியில் ஈடுபட்டனர். இரு நாட்களில், 210 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுகுறித்து, திருத்தணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறியதாவது: திருத்தணி நகராட்சியில், கடந்த 22 - வரும் 30ம் தேதி வரை, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடும் நாய்களுக்கு, அடையாளம் காணப்பதற்காக 'ஸ்டிக்கர்' ஒட்டி, மஞ்சம் வண்ணம் பூசப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.