ஊராட்சிகளுக்கு வழங்க 5,000 மரக்கன்று தயார்
திருவள்ளூர்:திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், மரங்கள் வளர்ப்பதற்காக, ஒன்றிய அலுவலகத்தில், 5,000 செடிகள் தயாராகி வருகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியத்திற்கு உட்பட்ட, 526 ஊராட்சிகளிலும், மரக்கன்றும் நடப்பட்டு வருகின்றன.நுாறு நாள் வேலை திட்ட பணியாளர் வாயிலாக, ஏரி, குளம், சாலைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.திருவள்ளூர் ஒன்றியத்தில், காக்களூர், ஈக்காடு, கல்யாணகுப்பம், மெய்யூர் உள்பட, 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும், திருவள்ளூர் ஒன்றிய அலுவலகம் வாயிலாக, மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஒன்றிய அலுவலக வளாகத்தில், 14 வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக, வேளாண் பட்டதாரி ஒருவர் உதவியுடன் வளர்க்கப்பட்டு வருகிறது.இதற்காக, ஒன்றிய அலுவலகத்தில், விதை விதைத்து, நாற்று நட்டு, வளர்ந்த மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வருகிறோம். தற்போது, சொர்கம், கொடுக்காபுளி, பூவரசு, புங்கன், மூங்கில் உட்பட 14 வகையான 5,000 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நல்ல முறையில் மரக்கன்றுகள் வளர்ந்ததும், வரும் ஜூன் முதல், ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.