கோரை புற்கள் வளர்ந்துள்ள குளம்
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், புண்ணியம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் வடக்கில் கொசஸ்தலை ஆறு பாய்கிறது. இதனால், இந்த பகுதியில் நீர்வளம் அபரிமிதமாக உள்ளது.விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. கிராமத்தின் கிழக்கில், பொது குளம் ஒன்று உள்ளது. ஆண்டு முழுதும் இந்த குளம் நிரம்பியே காணப்படும். சில ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. ஆனால், தொடர்ந்து பராமரிக்கப்படாததால், தற்போது குளத்தில் கோரை புற்கள் வளர்ந்து உள்ளன.நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக இருந்தும், உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த பொது குளத்தை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.