உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் அடாவடி! சிக்னல் பகுதியில் அதிகரிக்கும் பேனர்கள்

தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் அடாவடி! சிக்னல் பகுதியில் அதிகரிக்கும் பேனர்கள்

திருவள்ளூர், செப். 23-- சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள உயரமான கட்டடங்களில் விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.சென்னை, பள்ளிக்கரணையில் 2019 செப்டம்பரில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், டூ- -- வீலரில் வந்த சுபஸ்ரீ, 23, என்ற பெண் மீது பேனர் விழுந்தது. பின்னால் வந்த லாரியில் சிக்கி அவர் இறந்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.

அதிர்ச்சி

ஆனால் அனுமதியின்றி நெடுஞ்சாலையோரங்களில் பேனர் வைப்பது, கட்சி கொடிகள் கட்டுவது போன்றவை தினமும் நிகழ்ந்து வருகின்றன. இதேபோல், திருமணம், பிறந்தநாள், நினைவஞ்சலி, படிப்பு போன்றவற்றிற்கு கூட நெடுஞ்சாலையோரம் பேனர் வைப்பது தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய காவல் துறையினர், கண்டும், காணாமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் மற்றும் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உயரமான கட்டடங்கள் மீது மெகா சைஸ் விளம்பர பேனர்கள் வைப்பது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, திருமழிசை சிப்காட், பாப்பரம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம் இருங்காட்டு கோட்டை, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உயரமான கட்டடங்கள் மீது மெகா சைஸ் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அனுமதியில்லாமல் உயரமான கட்டடங்களில் வைக்கப்படும் மெகா சைஸ் விளம்பர பேனர்களால் மற்றும் மொபைல்போன் டவர்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

கடும் அச்சம்

மேலும் சில இடங்களில் உயரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இந்த மெகா சைஸ் விளம்பர பதாகைகள் வைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதன் பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு கட்டணம் செலுத்தி வைக்க வேண்டும்.ஆனால் நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டங்கள் மீது வைக்கப்படும் மெகா சைஸ் விளம்பர பேனர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டு வருகின்றன.

காற்றில் பறந்த பேனர்

திருவள்ளூர் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் நேற்று கண்ணீர் அஞ்சலி பேனர் மற்றும் தனியார் 'டிவி' நிகழ்ச்சி குறித்த மெகா சைஸ் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 'டிவி' நிகழ்ச்சி குறித்து இரும்பு கம்பியில் ஒட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் பிரிந்து காற்றில் பறந்து தொங்கியது.பொதுமக்கள் மற்றும் வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் எவ்வித அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்ற காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது பேனர் வைப்பதை தடுக்கவும், நெடுஞ்சாலை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை