திருத்தணியில் நாளை வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
திருவள்ளூர்:வேளாண் பொறியியல் துறை, தனியார் வேளாண் இயந்திர நிறுவனங்கள், கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, திருத்தணியில் நாளை வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் உழவு, நடவு, பயிர் பாதுகாப்பு, அறுவடை, பயிர் கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்து வேளாண் பணிகளிலும் டிராக்டர்கள், நெல், கரும்பு அறுவடை இயந்திரங்கள், 'பவர் டில்லர்கள்' போன்ற வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் அரசு மானியத்தில் வழங்கப்படுகின்றன.வேளாண் கருவி பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள, நாளை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முகாம் நடக்க உள்ளது. இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண்மை பொறியியல் துறை நடத்தும் முகாமில், தனியார் உற்பத்தி பொறியாளர்கள், அலுவலர்கள், உரிமையாளர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதிய நவீன வேளாண் இயந்திரங்கள், முகாமில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்படும். சிறு பழுதுபார்ப்பு பணிகளை கையாண்டு இயக்க வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.