காவல் சோதனைச்சாவடியில் அணையா மின் விளக்குகள்
திருவள்ளூர்,:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வெள்ளவேடு காவல் நிலைய காவல் சோதனைச் சாவடி. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேரூந்து, கனரக, இலகுரக, இருசக்கர வாகனம் என, தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் உள்ள காவல் சோதனைச்சாவடியில் இரவு மட்டும் ஐந்து பேர் பணி மேற்கொண்டு, வாகனங்களை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகனச் சோதனை போலீசார் பணி மேற்கொள்வதை முன்னிட்டு, பகலாக்கும் விதமாக ஐந்து வெள்ளை மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த ஐந்து மின் விளக்குகளும் பகல் நேரத்திலும் எரிந்து வருவது இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் சோதனைச்சாவடியில் பகலில் ஒளிரும் மின் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.