அறிவு சார் நகரத்துக்கு 111 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியீடு
சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில், அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்திற்கு, 111 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கல்வியை மையமாக கொண்டு, உலக தரத்திலான அறிவு சூழலை உருவாக்க, தமிழக அறிவுசார் நகரம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தை ஒட்டி, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,703 ஏக்கர் பரப்பளவில் இந்நகரம் அமைய உள்ளது.இதற்காக, விரிவான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, ஆலோசனை நிறுவனத்தை நியமிக்கும் பணிகளை, தமிழக தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனமான, 'டிட்கோ' மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்துக்கு, தேவையான நிலங்களை தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் பணிகளை, நில நிர்வாகத்துறை துவக்கி உள்ளது.தமிழக தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா, மேல்மாளிகைபட்டு கிராமத்தில் மூன்று கட்டங்களாக, 111 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து, அவற்றை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிப்பை, நில நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.