அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை
திருத்தணி:அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பேருந்து தடம் எண் 777 என்ற பேருந்து, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, சோளிங்கர் வழியாக வேலுார் வரை இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இந்த பேருந்து இயக்கப்பட்டது. ஓட்டுநராக விக்னேஷ்,26, நடத்துநராக மூர்த்தி, 38 ஆகியோர் பணியில் இருந்தனர்.இரவு, 8:30 மணிக்கு வேலுார் பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு, 10:30 மணியளவில் மேல் திருத்தணி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசி விட்டு தப்பிச்சென்றனர். இதில் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்தவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ஓட்டுநர் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரித்து வருகின்றனர்.